தமிழில் கடிதம் எழுதி இணையத்தில் அஞ்சல் செய்யலாம்


கடிதம்.நெட் என்பது வெளிநாடு வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்கும், தமிழகத்தில் இருக்கும் அவர்தம் உறவுக்கான ஓர் அஞ்சலம். வெளிநாட்டுக் குழந்தைகள் எழுதும் கடிதங்களை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பவும், அவர்களிடமிருந்து கடிதங்களைப் பெற்று வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு விரைந்து அனுப்பவும் செய்கின்றது.

வெளிநாட்டுக் குழந்தைகள் தாயகத்திற்குக் கடிதம் அனுப்புவது எப்படி…
இணையதளத்தில் பயனாளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். கைப்பட தமிழில் எழுதிய கடிதத்தை PDF அல்லது JPG கோப்பாக அனுப்பலாம். கடிதங்களைத் ஒருங்குறி எனச் சொல்லப்படும் Unicode தமிழில் தட்டச்சுச் செய்தும் அனுப்பலாம். பெறுபவரின் முகவரியைக் குறிப்பிட்டு கடிதம்.நெட் இணையத்தளம் வாயிலாக அனுப்பவேண்டும். நிழற்படம் (புகைப்படம்) அனுப்ப இருப்பின் அதையும் இணைக்கலாம். தமிழகத்தில் இருக்கும் கடிதம் சேவை மையம் மின்மடலில் பெறப்பட்ட கடிதங்களையும் நிழற்படங்களையும் அச்சிட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பும். அந்தக் கடித்ததோடு பதில் மடல் எழுதுவதற்குத் தேவையான வெற்றுத்தாள்கள், கடிதம் சேவை அமைப்பின் முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கடித உறை ஆகியவற்றை இணைத்து அனுப்பும்.

தமிழகத்தில் இருப்பவர் பதில் கடிதம் அனுப்பும் முறை...
வெளிநாட்டுக்குழந்தைகள் அனுப்பிய கடிதத்தோடு, கடிதம் சேவை மையம் அனுப்பியிருக்கும் வெற்றுத்தாள்களும், அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கடித உறையும் பெற்றுக்கொண்டவர், அந்தக் காகிதங்களில் தாங்கள் எழுதவேண்டியதை எழுதி, உறையில் இட்டு ஒட்டி அருகில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் போட்டால் போதும். அந்தக் கடிதம் எங்கள் சேவை மையத்திற்கு வந்தடையும்.வந்தடையும் கடிதம் உடனடியாகப் படமாக்கப்பட்டு (scan செய்யப்பட்டு) PDF அல்லது jpg கோப்பாகக் குறிப்பிட்ட பிள்ளையின் (பயனாளரின்) மின்மடல் முகவரிக்கு அனுப்பப்படும்.

நிபந்தனைகள்...
கடிதம் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளில் அனுப்பப்படும் கடிதங்கள் சேவை மையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

கட்டணம்...
கடிதம் சேவை முற்றிலும் இலவசம். தமிழை வளர்ப்பதைத் தவிர இந்தச் சேவையினால் எந்த ஆதாயமும் கடிதம் சேவை மையத்திற்கோ உலகத் தமிழ்மொழி அறக்கட்டளைக்கோ இருக்காது.

கொள்கை...
கடிதம் சேவை மையம் கடிதங்களையோ நிழற்படங்களையோ மின்னஞ்சல் அல்லது வீட்டு முகவரிகளையோ வேறு யாருக்கும் அளிக்காது, எங்கும் பிரசுரிக்காது. அதே சமயம் தனிப்பட்ட ரகசியங்கள், அந்தரங்கங்கள், சட்டத்திற்குப் புறம்பான தகவல்கள் போன்றவற்றை எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறோம். நீங்கள் அனுப்பும் கடிதங்களை வாசிப்பதில் கடிதம் சேவை அமைப்பினர்க்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், தவறான முறையில் இந்தச் சேவை பயன்படாமால் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குப் பல கடிதங்கள் வாசிக்கப்படும்.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் உறவுகள் தங்கள் குடும்பத்தோடு, கூடுதல் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள கடிதம்.நெட் அரிய வாய்ப்பாக விளங்குகிறது. அதோடு மாதாமாதம் குழந்தைகள் தாத்தா, பாட்டிக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி, இருபக்கமும் அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை எழுத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம், அக்கடிதங்களின் தொகுப்பு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான வரலாற்று ஆவணமாகவும் இருக்கும்.



எதிர்காலத்தில் கடிதம்.நெட் சேவை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளையும் தமிழகத்தில் வாழும் பிள்ளைகளையும் இணைக்க விரும்புகிறது.

இணையத்தளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"