திருப்பூர் கே.செட்டி பாளையம் அபிராமி கார்டனில் வசிப்பவர் பழனிசாமி (வயது30) இவரது மனைவி பிரியா(25).இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. பழனிசாமியின் சொந்த ஊர் நிலக்கோட்டை பழனிசாமி-பிரியா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூரில் வசிக்கிறார்கள். பழனிசாமி திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு பாலாஜி(7), தர்ஷினி(4), மதுஸ்ரீ(1)ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வீட்டின் நுழைவாயில் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்குள் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிரியாவின் பிணம் மிதந்தது. இது குறித்து தகவலறிந்த ரூரல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்த நிலையில் பிரியா கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரியாவின் கணவரின் தம்பியாகிய குபேந்திரனின் மனைவி தேவி (வயது 18) அவரது பக்கத்து வீட்டு பெண்களாகிய விஜயலட்சுமி (31), தனலட்சுமி (27) ஆகிய 3 பெண்களை திருப்பூர் ரூரல் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் பிரியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
பிரியாவை கொலை செய்தது பற்றி தேவி போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
பழனிசாமியின் தம்பியாகிய குபேந்திரனுக்கும் எனக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது. எனது கணவர் தனது அண்ணன் பழநிசாமியுடன் பூ வியாபாரத்துக்கு சென்று வந்தார். நானும் எனது கணவரின் அண்ணன் மனைவியாகிய பிரியாவும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தோம். இதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்கு வாதம் வந்தது. ஒரு சில நேரங்களில் எனக்கும் பிரியாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. மேலும் பிரியா என்னை நடத்தை கெட்டவள் என்று திட்டினார். இதனால் எனக்கு பிரியாவை சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் எனது கணவர் குபேந்திரனும் பிரியாவுடன் சகஜமாக பழகி வந்தார். எனவே அவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது போல தோன்றியது. இதனால் பிரியாவின் மேல் எனக்கு கோபம் அதிகமாகி இருந்தது.
எனக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிற விஜயலட்சுமியும், தனலட்சுமியும் எனக்கு அடிக்கடி ஆறுதல் கூறி வந்தார்கள். இப்படியே அவள் உன்னை அடிக்கிறாள் அடிக்கடி சண்டை போடுகிறாள் அவளை கொன்றால் தான் என்ன? என்று கேட்டனர். தொடர் சண்டையின் காரணமாக இவர்கள் இருவரும் சொன்னது எனக்கு மனதிற்குள் பதிந்து விட்டது. இதையடுத்து நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பிரியாவை கொல்ல ஒரு வாரத்துக்கு முன்னதாகவே திட்டமிட்டோம். விஜயலட்சுமியும்,தனலட்சுமியும் பிரியாவை கொலை செய்ய என்னுடன் வருவதாகவும்,அதற்காக பிரியாவின் நகைகளை மட்டும் தந்தால் போதும் என்றும் கூறினார்கள். கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பிரியாவின் வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தோம். ஆனால் வீட்டில் பிரியாவின் கணவரும், அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களும் இருந்தார்கள். இதனால் எங்களால் பிரியாவை கொல்ல முடியாமல் போனது.
இந்த நிலையில் தான் கடந்த 18-ந்தேதி காலை 8 மணிக்கு பழனிசாமி குழந்தைகளை அழைத்து கொண்டு சென்று பள்ளியில் விட்டு விட்டு பூ வியாபாரத்துக்கு சென்று விட்டார். பிரியா தனியாக இருப்பதை அறிந்து நான் அவளை கொல்ல இதுவே சரியான நேரம் என்று முடிவு செய்தேன். பிரியா இருக்கும் வீட்டில் உள்ள நாய் யாரையும் அங்கு வர விடாது. எனவே நான் முதலில் சென்று நாயை அழைத்து கொண்டு சென்று கழிவறையில் விட்டு பூட்டினேன். பிறகு வந்து பிரியா இருக்கும் வீட்டின் முன்னாள் நின்று பிரியாவை அக்கா என்று அழைத்தேன். இதற்குள்ளாகவே நாங்கள் திட்டமிட்டபடி விஜயலட்சுமியும், தனலட்சுமியும் வந்து விட்டார்கள். மூன்று பேரும் சேர்ந்து பிரியாவை அவளது வீட்டுக்கு அருகிலேயே உள்ள பொருட்கள் போட்டு வைக்கும் வீட்டுக்குள் அழைத்து சென்றோம். உடனே நான் தயாராக வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து பிரியாவின் தலையில் அடித்தேன். அவள் சுருண்டு விழுந்தார்.
உடனே தனலட்சுமி தனது கையில் வைத்திருந்த கத்தியால் பிரியாவை குத்தினாள்,விஜயலட்சுமி அவளை அரிவாளால் வெட்டினாள். உடனே பிரியா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து செத்தாள். ஆனாலும் என்னுடைய ஒழுக்கம் பற்றி தவறாக அவள் பேசியதும், எனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் எண்ணியதால் எனக்கு ஆத்திரம் அதிகரித்தது. இந்த வாய் தானே என்னை இழிவாக பேசியது என்று பிரியாவின் வாயிலும், இதைக்கண்டு தானே எனது கணவன் உன்னுடன் மயங்கினான் என்று கூறி பிரியாவின் பிறப்புறுப்பிலும் தாறுமாறாக ஆத்திரம் தீரும் வரை கத்தியால் குத்தினேன். செத்துப்போன பிரியாவின் 4 3/4 பவுன் நகைகளை விஜயலட்சுமியும் தனலட்சுமியும் எடுத்துக் கொண்டார்கள். பிரியாவின் பிணத்தை எடுத்து அறைக்குள்ளேயே உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு தொட்டியை மூடினோம். பிறகு அந்த அறையை பூட்டி வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நாயை திறந்து விட்டு விட்டு எதுவும் தெரியாதது போல சென்று விட்டோம்.
போலீசுக்கு தகவல் தெரிந்து பழனிசாமி உள்பட உறவினர்களை விசாரித்தார்கள் நான் மாட்டிக் கொள்வோம் என்பதால் விசாரணைக்கு செல்லவில்லை. விசாரணைக்கு வரவில்லை என்றால் நம்மை தான் சந்தேகப்படுவார்கள் என்று எனது கணவர் கூறினார். எனவே விசாரணைக்கு வந்தோம். விசாரணையில் போலீசாரிடம் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினேன். ஆனால் நான் தவறவிட்ட எனது மெட்டியை போலீசார் காட்டி இது எப்படி அங்கு வந்தது என்று கேட்டதும் நான் சிக்கி கொண்டதை உணர்ந்தேன். நானும் எனது தோழிகள் விஜயலட்சுமி,தனலட்சுமியும் சேர்ந்து பிரியாவை தீர்த்து கட்டியதை ஒத்துக்கொண்டோம்.இவ்வாறு பிரியா போலீசாரிடம் கூறினார். இதையடுத்து கைது செய்த மூன்று பெண்களையும் திருப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம்,ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஜே.எம்.2 கோர்ட் நீதிபதி மலர்மன்னனிடம் ஆஜர்படுத்தினார்கள்.
நீதிபதி மூன்று பேரையும் 15 நாள் நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். பிரியாவின் கொலையில் தேவிக்கு துணையாக வந்த விஜயலட்சுமியும், தனலட்சுமியும் அக்காள் தங்கைகள். சொந்த ஊர் மணப்பாறையை சேர்ந்த இவர்கள் திருப்பூரில் பிரியாவின் வீட்டருகில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள்.தங்களது தம்பிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதால் திருமண செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். பக்கத்து வீட்டில் தேவிக்கும் பிரியாவுக்கும் நடக்கிற சண்டையை பயன்படுத்தி பிரியாவை தேவியின் துனையுடன் கொன்று அவளது நகைகளை எடுத்துக்கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள்.அதன்படி தேவியை அடிக்கடி பேசி தூண்டி விட்டு பிரியாவை கொலை செய்ய தயார்படுத்தி உள்ளார்கள். கொலை செய்ததும் பிரியா அணிந்திருந்த நகைகளை எடுத்து கொண்டு சென்று தங்களது வீட்டில் மறைத்து வைத்தனர். போலீஸ் விசாரணையில் தேவி உண்மையை ஒத்து கொண்டதையடுத்து இவர்கள் இருவரும் குற்றத்தை ஒத்து கொண்டனர். விஜயலட்சுமியின் வீட்டில் இருந்த நகைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.