கேரளாவில் காதல் நாடகமாடி பள்ளி மாணவியைக் கடத்தி கற்பழித்ததோடு தனது நண்பர்கள் 10 பேருக்கு அவரை விருந்தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகேயுள்ள கடமுடுக்கியைச் சேர்ந்தவர் ரெஜினேஷ். மரசிற்ப தொழில் செய்து வருகிறார். அவர் முப்பதெட்டாம் தேசம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு மரசிற்ப வேலைக்காக சென்றார்.
அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆசை வார்த்தைகள் கூறி ரெஜினேஷ் அந்த மாணவியை காதலிப்பது போல் நடித்தார். மாணவியும் ரெஜினேஷை முழுவதுமாக நம்பினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெஜினேஷ் அந்த மாணவியை கடத்திச் சென்றார்.
மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை ஆலுவா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரெஜினேஷையும், மாணவியையும தேடி வந்தனர். இந்நிலையில் ஆலுவாவில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த மாணவியை போலீசார் மீட்டனர். ரெஜினேஷும் கைது செய்யப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை ரெஜினேஷ் கடத்தி கற்பழித்தது மட்டும அல்லாமல் அவரை தனது நண்பர்கள் 10 பேருக்கும் விருந்தாக்கியது தெரிய வந்தது. இதை மாணவியே போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரெஜினேஷின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
