சீனாவில் 6 பெண்களை ஒரு அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த ஆசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்தவர் லீ ஹவோ (35). இவருக்கு திருமணமாகி 8 மாதத்தில் குழந்தை உள்ளது. தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலை செய்தார். குடும்பத்தினருடன் வாழாமல் கடந்த 2009ம் ஆண்டு லுவோயாங் நகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளார் லீ.
வீட்டுக்குள் ரகசியமாக பாதாள அறை கட்டியுள்ளார். அங்கு 6 பெண்களை அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். அத்துடன் பலரை அழைத்து வந்து விபசாரம் நடத்தியுள்ளார். இந்நிலையில், லீயின் பிடியில் இருந்து தப்பி வந்து ஒரு இளம்பெண் போலீசில் தகவல் அளித்தார். உடனடியாக விரைந்து சென்ற போலீசார், பாதாள அறையில் இருந்த பெண்களை மீட்டனர்.
இதுதெடார்பாக லீயை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். அவர் மீது கொலை, பலாத்காரம், விபசாரம், சட்டவிரோதமாக பெண்களை அடைத்து வைத்தது, பணத்துக்காக நிர்வாண காட்சிகளை வெளியிட்டது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து லுவோயாங் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. லீக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இளம்பெண்களை கடத்தி சென்று 2 மாதம் முதல் 21 மாதம் வரை பாதாள அறையில் லீ அடைத்து பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் பலரையும் அழைத்து வந்து அவர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். தன் பிடியில் இருந்த பெண்களை நிர்வாணமாக்கி அதை ஆன்லைனில் வெளியிட்டு பணம் வசூலித்துள்ளார்.
மேலும் பாதாள அறையில் 6 பெண்களை அடைத்து வைத்துள்ளார். அவர்களில் 2 பெண்களை கொலை செய்துவிட்டார். அந்த கொலைக்கு மற்ற பெண்களும் உடந்தையாக இருந்துள்ளது அதிர்ச்சியாக இருந்தது. எனினும், அந்த சூழ்நிலையில் லீக்கு பயந்து அவர்கள் கொலைக்கு உதவியது தெரிய வந்தது. அதனால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்