சுமார் 10 வருடங்களுக்கு முன் தனித்தனியே காணாமல் போன 3 இளம் பெண்கள் அமெரிக்கா கிளீவ்லாந்தின் தென்பகுதியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இவர்களை மீட்ட காவல்துறையினர் இதற்குக் காரணமாயிருந்த மூன்று சகோதரர்களைக் கைது செய்துள்ளனர்.
அங்கு குவிந்திருந்த மக்களின் உற்சாகத்துக்கு இடையே அமன்டா பெர்ரி, கினா டிஜெசஸ், மிக்சேல் நைட் என்று அவர்கள் மூன்று பேரின் பெயர்களையும் காவல்துறை அறிவித்துள்ளது.
இவர்களுடன் 6 வயது சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்கள் எவ்வாறு கண்டபிடிக்கப்பட்டனர் என்று காவல்துறை உடனடியாக அறிவிக்கவில்லை என்றாலும் அவர்கள் உடல் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனைக்குப்பின் உரியவர்களிடம் சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவித்தது.
இவர்களுள் பெர்ரி அவசர உதவிக்கு அழைத்து தாங்கள் இருக்குமிடத்தைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சகோதரர்களுள் 52 வயதுடைய ஒருவர் அந்தப் பெண்கள் சிறைவைக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகின்றது. இவர்கள் குறித்த ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தப் பெண்கள் காணாமல் போன இடத்திலுருந்து சிறிது தூரத்திற்குள்ளேயே திரும்பக் கிடைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது