திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி உறவு கொண்டால் குற்றமல்ல!!


"திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றி பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்புணர்வு குற்றமாகாது" என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர், 19 வயது இளம்பெண்ணான மேனகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வைக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்ட கிஷோர், மேனகாவைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து மேனகா காவல்துறையிடம் அளித்தப் புகாரைத் தொடர்ந்து, பாலியல் பலாத்கார வழக்கில் கிஷோர் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கை விசாரித்து நீதிமன்றம், மேனகாவின் குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபணமானதைத் தொடர்ந்து கிஷோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த கிஷோரின் மனுவினை, அரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு கீழ் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதியும் செய்தது.

அதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிஷோர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரமாகாது என அதிரடி தீர்ப்பு வழங்கி கிஷோரை விடுதலை செய்தது.

உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் அளித்த தீர்ப்பு விவரம்:
'பாலியல் பலாத்காரத்துக்கும், பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கும் வேறுபாடு உள்ளது. பாலியல் பலாத்காரம் என்பது பெண்ணின் மீது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடத்தப்படும் கொடூர தாக்குதலாகும். இது பெண்ணை விலங்குக்கு சமமாக்கி விடுகிறது.

பாலியல் பலாத்காரம் என்பது ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கு எதிரான குற்றமாகும். அதே நேரம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது. இது, வாக்குறுதியை மீறிய செயலாக மட்டுமே கருதப்படும். இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் உண்மையிலேயே அந்தப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினாரா அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டாரா என்பதை பார்க்க வேண்டும்.

19 வயது நிரம்பிய பெண்ணுக்கு போதிய முதிர்ச்சியும், தார்மீக ஒழுக்க வாழ்க்கையின் முக்கியத்துவமும் நன்றாக தெரிந்திருக்கும். அப்படி இருக்கையில், குற்றம் சாட்டப்பட்டவருடன் சம்மதம் இல்லாமல் அந்தப் பெண் உறவு கொண்டார் என்று கூற முடியாது. எனவே, கிஷோரை விடுதலை செய்ய வேண்டும்." மேற்கண்டவாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"