பெண்களின் வித்தியாசமான கல்யாண ஆசைகள்


18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட ‘கல்யாண ஆசைகள்’ பற்றிய கருத்துக்கணிப்பில் அவர்கள் தங்களது வித்தியாசமான விருப்பங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நண்பர்போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்று 80 சதவீத பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 10 சதவீதம்தான். கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே!

மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தர வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.

ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பழைய காலத்து மாடல் பெண் பார்க்கும் சடங்கில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், ‘இவர்தான் உன் வருங்கால கணவர்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பெரும்பாலான இளம் பெண்கள் சொல்கிறார்கள். வயதான பெற்றோர்கள் வரனின் வேலை, சம்பளம், குடும்பம், சொத்து இவைகளைத்தான் பார்க்கிறார்கள்.

அவைகள் திருப்திபட்டால், அந்த மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்லிவிடுகிறார்கள். அவர் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வருவார் என்பது தங்களுக்குத்தான் தெரியும் என்று இளம் பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எவ்வளவு நல்லவரனாக இருந்தாலும், ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம்.

நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று, 68 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள். பத்து சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சத வீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கணவருக்கு வேறு பெண்களோடு இருந்த தொடர்பு பற்றி கேள்வி எழுப்பமாட்டோம் என்று 3 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். 90 சதவீத பெண்கள், திருமண வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் இருந்தாலும் திருமணம் செய்துகொள்வோம் என்கிறார்கள்.

ஆனால் 30 வயதிற்கு பிறகு அது போதுமே என்கிறார்கள். 40 சதவீத பெண்கள் திருமணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம் என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தவேண்டியதில்லை என்று 58 சதவீத பெண்கள் சொல்லும்போது, 42 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றுகூறி, ஆடம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த மறுநாளே குப்பைக்கு போகும் அழைப்பிதழுக்காக நிறைய பணத்தை செலவிடவேண்டியதில்லை. அது ரொம்ப சிம்பிளாக இருந்தால் போதும் என்று 84 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 70 சதவீத பெண்கள், தங்கள் கணவர் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டியதில்லை என்று அதிரடியாக கூறியிருக்கிறார்கள்.

நடத்தை, தொழில், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணாதிசயம் போன்றவைகளுக்கு அடுத்த இடத்தில்தான் தோற்றத்தை வைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சினிமா ஒன்றில் கதாநாயகன், கதாநாயகியிடம் ‘நீ கன்னித்தன்மை கொண்டவள்தானா?’ என்று கேட்பார்.தங்களிடம் அப்படி ஒருவர் கேட்டால் கோபப்படமாட்டோம். பதிலுக்கு அவரிடம் அதே கேள்வியை திரும்பகேட்போம் என்று 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். ‘அப்படிப்பட்ட பழமைவாதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று 43 சதவீத பெண்கள் சொல்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். காரணம், மது அருந்துபவர்கள் அளவுக்குள் அடங்கிக் கொள்ளமாட்டார்கள். எல்லை மீறிப்போய்விடுவார்கள் என்ற பயம் பெண்களிடம் இருக்கிறது.

டீன்ஏஜ் பெண்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு சமையல் தெரியும் என்றிருக்கிறார்கள். ஆனால் தங்களை சமையல் அறைக்குள்ளே போட்டுவிடக்கூடாது என்ற பயத்தில், ‘சமையல் அவ்வளவாக தெரியாது’ என்று கூறி விடுகிறார்களாம்! இது எப்படி இருக்கு!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"