வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணை அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி காரிலேயே வன்புணர்ந்த மர்ம நபர்கள் இருவரைக் காவல்துறை தேடி வருகிறது.
மும்பை தானே பயந்தரில் வசித்து வரும் 29 வயது பெண், வேலைக்காக இணையதளத்தில் தம் விபரங்களை வெளியிட்டு வேலை வேண்டுமென விண்ணப்பம் செய்திருந்தார். அதிலிருந்து அவருடைய தொடர்பு எண்ணை எடுத்த மர்ம நபர்கள், கடந்த வெள்ளியன்று அவரைத் தொடர்பு கொண்டு வேலைக்காக நேர்காணல் நடத்த வேண்டுமென அழைத்துள்ளனர்.
இதனை நம்பி அவர்கள் சொன்ன பயந்தர் ரயில் நிலையம் வந்த அவரை, அலுவலகத்திலிருந்து வருவதாக கூறி இருவர் காரில் ஏற்றிச் சென்றனர். கார் சென்று கொண்டிருக்கும்போதே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, காரிலேயே அப்பெண்ணை இருவரும் வன்புணர்ந்துள்ளனர்.
பின்னர் அதே ரயில் நிலையத்தில் அவரை இறக்கிவிட்டு மாயமாகினர். இது குறித்து அந்தப் பெண் நாவ்கர் காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குறிப்பிட்ட அந்த இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.