கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்து மயங்க வைத்து ஆபாச படம் எடுத்த 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயது கல்லூரி மாணவி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நட்பாக பழகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் பஸ்சுக்காக மாணவி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், மாணவியை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி அங்குள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் குளிர்பானத்தில் மதுவை கலந்து மாணவிக்கு கொடுத்துள்ளார். இதையறியாமல் குடித்த மாணவி, மயங்கி விழுந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், மாணவியின் ஆடைகளைக் களைந்து லேப் - டாப் வெப் கேமரா மூலம் ஆபாச படம் எடுத்ததாக தெரிகிறது. பின்னர் இதை, அவர் மற்றவர்களுக்கு காட்டியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், சில மாதங்களுக்கு முன்பு வாலிபரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு வாலிபர், "தெரியாமல் படம் எடுத்துவிட்டேன், ஆபாச படத்தை அழித்துவிடுகிறேன்" எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் சேர்ந்து மாணவியின் ஆபாச காட்சிகளை சிலருக்கு செல்போன் மூலம் பரப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், நேற்று திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.