விந்துவின் ஆற்றலை பெருக்கும் காயகல்ப பயிற்சி

மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.

1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு
5. எலும்பு
6. மஜ்ஜை
7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல் விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும் அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து ‘மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி’ என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.

1.
ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா

2.
கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.

சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.

காயகற்பப் பயிற்சி பயன்கள்
1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
7.மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"