கணவருடன் ‘செக்ஸ்’ உறவு கொண்டால் ஆயுள் தண்டனை: மனைவிக்கு கோர்ட் எச்சரிக்கை


கணவருடன் தூங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று மனைவியை இங்கிலாந்து கோர்ட்டு எச்சரித்துள்ளது.

இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியது ஆகும். அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் பஞ்சாபில் மணப் பெண் பார்த்தனர். மணப்பெண், கால் முடமானவர்.

கடந்த 2009-ம் ஆண்டு, திருமணத்துக்காக, அந்த வாலிபர், இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாலி கட்டுவதற்கு முன்பு, அவரை அப்பெண் பார்க்கவில்லை. தாலி கட்டிய பிறகுதான், தனது கணவர் இயல்பான மனிதர் அல்ல என்று அவர் புரிந்து கொண்டார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடன் வாழத் தொடங்கினார்.

திருமணத்துக்கு பிறகு, இருவரும் இங்கிலாந்து திரும்பினர். இங்கிலாந்து சட்டப்படி, ‘செக்ஸ்’ உறவுக்கு சம்மதிக்கவோ, மறுக்கவோ இயலாத நிலையில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவரின் திருமணம் ரத்து செய்யப்படும். எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேஷ கோர்ட்டில் அரசுத்தரப்பு முறையிட்டது. அந்த வாலிபரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி ஹோல்மன் விசித்திரமான தீர்ப்பு அளித்தார். அந்த வாலிபர், செக்ஸ் உறவுக்கு உடன்படும் திறன் படைத்தவர் அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார்.

எனவே, அவருடன் தூங்கி அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் நீதிபதி கூறினார்.

அதே சமயத்தில், அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டார். தனது துயரமான நிலைமையை மனவலிமை மற்றும் கண்ணியத்துடன் அப்பெண் தாங்கி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

‘கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை’ என்று இங்கிலாந்தில் இதுபோன்று ஒரு நீதிபதி தீர்ப்பு அளிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"