டிரைவிங் லைசென்ஸ் பெற செய்ய வேண்டியவைகள்!!


உங்களுக்குப் 16 வயது முடிந்திருந்தால், 50 சிசி-க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். 18 வயது முடிந்திருந்தால், 50 சிசி-க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள் (வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்
1. முகவரி ஆதாரம் (உ-ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).
2. வயது ஆதாரம் (உ-ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).
3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் - 1 (இந்தப் படிவத்தில் 'அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப் பரிசோதித்து, 'நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்க வேண்டும்), மற்றும் படிவம் - 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.).

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, கட்டணம் செலுத்தி பழகுநர் உரிமம் ((Learner’s Licence) ) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர் உரிமம் ((Driving Licence)) பெற நேரில் ஆஜராக வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு, ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4-ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும் (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால், படிவம் 5 இணைக்க வேண்டும்).

இணைக்க வேண்டிய ஆவணங்கள்: 
1. பழகுநர் உரிமம்,
2. வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷூரன்ஸ்),
3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம்,
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

இவற்றுடன் உரிமம் வழங்கவும், தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

பரீட்சை நடைபெறும் முறை
வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில் அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக் காட்டினால், ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான் உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.

வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது?
விலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்.

உங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து 'உண்மையான உரிம நகல்தான்’ என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச் சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.

உரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால், மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா?
இல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.

உரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப் பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.

அசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா?
கூடாது. தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்து போனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப் பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு 'நகல் உரிமம்’ தர பரிந்துரை செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். போக்குவரத்து அலுவலகத்தில் பதிவேடுகளில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொண்டு நகல் உரிமம் வழங்குவார்கள்.

உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?
டிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது, அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும் உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் 'என் மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது’ என ஒப்புதல் அளிக்க வேண்டும்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"