திருமணம் செய்து 7 குழந்தைகளுக்கும் தாயான பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் மணந்த பெண் தம் உடன்பிறந்த சகோதரி என்பதை அறிந்தவர், தம் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
சவுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம்பதியர் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தாம் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வரும் தம் மனைவி, சிறு வயதில் தமக்குக் காணாமல் போன உடன்பிறந்த சகோதரி என்பது உறவினர் ஒருவர் மூலம் கணவனுக்குத் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரும் மரபணு சோதனை செய்து பார்த்தபோது, தாங்கள் இருவரும் ஒரே தாய், தந்தைக்குப் பிறந்தவர் தாம் என்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்நபர் தம் சகோதரியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இருவரையும் விசாரித்த நீதிமன்றம், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
இதற்கிடையில், சகோதரியை மணந்து குடும்பம் நடத்தியவருக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்க வேண்டுமென எழுந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், தெரியாமல் இழைத்த தவறுக்குத் தண்டனை வழங்க இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை என்று கூறியுள்ளது.