நாகர்கோவிலில் விபசாரத்தில் ஈடுபட்டு கைதான 3 பெண்கள் உள்பட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலை பார்வதிபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
3-வது தளத்தில் உள்ள அலுவலக அறைகளில் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபசாரத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜன் (51), சந்தோஷ்குமார் (35), பார்வதிபுரம் இனிகோ (50), கோவில்பட்டி மணிகண்ட பார்த்திபன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுடன் இருந்த சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 33 வயது பெண் உள்பட 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர். கைதான 7 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள். விபசார கும்பலுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். விபசாரம் நடந்த அலுவலகத்துக்கு அடிக்கடி ஆண்களும் பெண்களும் வந்து சென்றுள்ளனர். இதுபற்றி கீழ் தளத்தில் உள்ளவர்கள் கேட்டபோது, இன்டர்வியூக்கு வந்ததாக அவர்கள் கூறுவார்களாம்.
காலையில் இருந்து மாலை வரை டிப் டாப் உடையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து சென்றதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். காவல்துறையை சேர்ந்த சிலரும் இந்த கட்டிடத்துக்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. கட்டிட உரிமையாளர் சிக்கினால் பல திடுக்கிடும் தகவல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.