பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ளது காயிர்புர் மாவட்டம். இங்குள்ள கம்பாத் என்ற கிராமத்தில் வசிப்பவர் மும்தாஸ் மிர்பகர், வர்த்தகர். இவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் மிர்பாகரையும், அவருடன் இருந்த பெண்ணையும் கைது செய்தனர். இவர்கள் இருவரின் உடைகளையும் வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணமாக்கினர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்தது. எனவே இதை பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் போட்டோ எடுத்தனர். இந்த காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து தகவல் பரவியதும், சம்பந்தப்பட்ட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மிர்பகருக்கு மட்டும் உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவரது கள்ளக்காதலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், போலீசாரின் அராஜகத்தை எதிர்த்து சிந்து உயர் நீதிமன்றத்தில் மிர்பகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்ல போலீசார் முயற்சித்த போது, உள்ளூர் பெண்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களை போலீசார் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.