ரவுடிகள் சிறுமியை கற்பழித்ததால் தந்தை தற்கொலை!


அரியானா மாநிலம், ஹிசார் அருகே உள்ளது தப்ரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை 12 பேர் கொண்ட ரவுடி கும்பல் கடத்திச் சென்று, காட்டுப் பகுதியில் வைத்து கற்பழித்தது. அந்த காட்சியை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவன் செல்போனில் படம் பிடித்தான்.

அனைவரும் கற்பழித்த பிறகு சிறுமியை ரோட்டில் கொண்டு வந்து போட்டு விட்டு தப்பினர். நினைவு திரும்பிய அந்த சிறுமி வீட்டுக்கு வந்து, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் விளக்கினாள்.மேலும் தன்னை கற்பழித்த ரவுடிகளில் சிலரின் அடையாளங்களையும் கூறினாள்.

அவர்களிடம் சென்று சிறுமியின் தந்தை சத்தம் போட்டார். மேலும் போலீசில் புகார் செய்யப் போவதாகவும் கூறினார். உடனே செல்போனில் படம் பிடிக்கப்பட்ட கற்பழிப்பு காட்சியை காட்டி போலீசுக்கு சென்றால் இந்த காட்சியை மற்றவர்களின் செல்போன்களுக்கு அனுப்பி வைப்போம். இணைய தளத்திலும் வெளியிடுவோம். சி.டி.யாக தயாரித்தும் விற்பனைக்கு விடுவோம் என்று மிரட்டினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வீட்டுக்கு திரும்பி வந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தப்ரா கிராம மக்களுக்கு தெரிய வரவே ஆவேசம் அடைந்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் வந்து உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜய்சிங் சவுதலா, கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில் சிறுமியை கற்பழித்த வழக்கில் நேற்று ஒருவன் கைது செய்யப்பட்டான். அவன்தான் கற்பழிப்பு கும்பலின் தலைவன் என்று கூறப்படுகிறது. அவன் பெயர், விவரங்களை தெரிவிக்க ஹிசார் போலீசார் மறுத்து விட்டனர். அவன் கூறிய பெயர், விவரங்களை வைத்து மற்ற 11 குற்றவாளிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி சதீஷ்பாலன் கூறினார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"