திருமணமாகி பத்து வருடமாகியும் தன்னுடன் தாம்பத்ய உறவை வைத்துக் கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டு வந்த கணவர் மீது கோபமடைந்த பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் அந்தக் கணவரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அழகுபாவி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயது சங்கர். இவரது மனைவி 36 வயது பாரதி. திருமணமாகி 10 வருடம் ஓடி விட்டது. ஆனாலும் சங்கருக்கு என்ன காரணத்தாலோ பாரதியைப் பிடிக்கவில்லை. இதனால் திருமணமானது முதலே தாம்பத்யம் வைத்துக் கொள்ளாமலேயே இருந்து வந்துள்ளார். பாரதியும் மிகப் பொறுமையாக இத்தனை காலத்தையும் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில்தான் சங்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பாரதிக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் கொதிப்படைந்தார். தன்னை இத்தனை நாட்களாக தவிக்க விட்டு விட்டு, இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறாரே என்று கோபமடைந்தார். கணவருடன் சண்டை பிடித்தார், கண்டித்தார். ஆனால் சங்கரோ, கோபத்தில் மனைவியை அடித்து உதைத்து வீட்டை விட்டே அனுப்பி விட்டார்.
தாய் வீடு திரும்பிய பாரதி, ஓசூர் மகளிர் காவல் நிலையத்தை அணுகி கணவர் மீது புகார் கொடுத்தார். என்னுடன் உறவு கொள்ளாமல், வேறு பெண்களுடன் தனது கணவர் உல்லாசமாக இருப்பதாக புகாரில் கூறினார். இதையடுத்து போலீஸார் சங்கரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் பாரதி கூறியது உண்மை என்று தெரிய வரவே சங்கரைக் கைது செய்தனர் போலீஸார்.