ஆண்மை குறைவுக்கு வைத்திய மருந்துகள் அவசியமா?


உயிரினங்களிலேயே மனிதன் மட்டும்தான் உடலுறவில் தனது இணையின் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். தளர்ந்துபோன தனது நாடி நரம்புகளுக்குப் புது ரத்தம் பாய்ச்சி நீண்ட நேரம் இல்லற இன்பம் துய்க்க விரும்பும் ஆண்களைக் குறிவைத்து மிகப் பெரிய மருந்து சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது. அதுதான் ஆண்மை எழுச்சியூட்டும் மருந்துகளின் அசுர வணிகம். பொதுவாக இதனை 'நைட் பில்ஸ்’ என்பார்கள்.

அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும், 'வாலிப வயோதிக அன்பர்களே!’ எனக் கூவிக் கூவி அழைத்து இந்த வகை மருந்துகளுக்கு விளம்பரம் செய்கிறார்கள்.தெருவோரத்தில் கடை பரப்பி விற்கப்படும் பீமபுஷ்டி லேகியம், சிட்டுக்குருவி லேகியம், கருங்குரங்கு லேகியம், பச்சைப்புறா லேகியம் முதல் ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் வயகரா வகையறா மருந்துகளுக்குப் பஞ்சமே இல்லை.

மருத்துவரிடம் செல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு இவைபோன்ற மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் பயன் பெறுகிறார்களா? உண்மையில் என்ன நடக்கிறது?

''போதுமான எழுச்சி இல்லாமல் போவதோ, மனைவியை முழுத் திருப்திப்படுத்த முடியாமல்போவதோ ஆண்மைக் குறைவு எனப்படுகிறது. இதுவும் மலட்டுத்தன்மையும் ஒன்றல்ல. அவசரம், பதட்டம், அதீத ஆசை, மனம் ஒத்துப்போகாமல் இருத்தல், மதுவுக்கு அடிமையாதல், சர்க்கரை நோய், மனக் குழப்பம், மூளை மற்றும் நரம்புக் கோளாறுகள், தொடர்ந்து சாப்பிடும் சிலவகை மருந்துகள் போன்ற பல காரணங்களால் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.

ஆண்மைக் குறைவு உடலில் ஏற்படும் குறைபாட்டில் இல்லை என்பதை அதிகாலையில் சிறுநீர் கழிக்கும்போது குறி விரைப்பாக உள்ளதைக் கண்டு தெரிந்துகொள்ளலாம். தூக்கத்தில் அல்லது சிறுநீர் கழிக்கும்போது விந்து வெளியேறினால் அது ஆண்குறியில் பாதிப்போ என்று பயப்பட வேண்டியது இல்லை.

சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உணர்ச்சிகளைத் தூண்டவோ, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவோ செய்யலாம். அது 100 சதவீதம் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வுகள்தான் உறுதிசெய்ய வேண்டும். இந்த பிரச்னைக்கு, சரியான மனநல ஆலோசகர், குடும்ப மருத்துவரிடம் செல்வதே நல்ல தீர்வைத் தரும். மாறாகத் தவறான வழியைத் தேர்ந்தெடுத்தால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் சிக்கிச் சீரழிய வேண்டியதுதான்''

''காலம் காலமாக, பல்வேறு மூலிகை மருந்துகள் உடல் அபிவிருத்திக்கும், மனச் சோர்வை நீக்கவும், ஆண்மை எழுச்சி பெறவும் கொடுக்கப்பட்டு வந்தாலும் விளம்பரம் செய்யப்படும் அளவுக்கு வேலை செய்கின்றனவா என்பது சந்தேகமே! இதற்காக சித்த மருத்துவத்தில், அஸ்வகந்தாதி லேகியம் (ஆயுர் வேதம்), லபுகபிர் (யுனானி), அமுக்கரா சூரணம், வெண்பூசணி லேகியம், சௌபாக்கிய சுண்டி போன்ற லேகியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இவை நல்ல பலனைத் தரும்.''

'இரவுக் குளிகைகள் 100 சதவிகிதம் உபயோகம் அற்றவை. வயாகரா போன்ற நிரூபிக்கப்பட்ட மருந்துகள், இந்த மருந்துகள், ஆண் குறியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதய நோயாளிகள், வயதானவர்கள் எடுத்துக்கொண்டால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த மருந்துகள் ஆசையைத் தூண்டிவிடுவது இல்லை. ஆசை இல்லாத நபர் இந்த மருந்தை உட்கொண்டாலும் எழுச்சியை ஏற்படுத்தாது. மனம் ஒத்துழைக்காவிட்டால், மருந்தால் ஒரு பயனும் இல்லை.''

ஆர்வக் கோளாறில், விடலைப் பருவத்தினர், இதுபோன்ற மாத்திரைகளைப் பயன்படுத்திவிட்டு, ஒரு பயனும் இல்லை என்பதை உணர்வதற்கு கொடுக்கும் விலை அதிகம். பெரியவர்களோ, தனக்கு ஏதோ வியாதியால்தான் மாத்திரை வேலை செய்யவில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதுபற்றி, ஒருவருக்கு ஒருவர் பேசாததன் விளைவு, வியாபாரம் கன ஜோராக நடக்கிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"