உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், இஎஸ்பிஎன் விளையாட்டு சஞ்சிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அமெரிக்க ஓபன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் லைன் நடுவரைப் பார்த்து கோபமாக திட்டியதும் தற்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காகவும் அவர் இரு கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
அமெரிக்க ஓபன் சர்ச்சை தொடர்பாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இஎஸ்பிஎன் இதழின் அட்டைப் படத்தில் முழு நிர்வாணத்துடன் செரீனா கொடுத்துள்ள போஸ் இடம் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டுக்காகவும் செரீனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகி விட்டது. நன்னடத்தை விதிகளின்படி 2 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் செரீனா பங்கேற்க தடை விதிக்கப்படும்.
அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், கடந்த 15 ஆண்டுகளில் நன்னடத்தை விதி மீறலால் தடை விதிக்கப்படும் முதல் வீராங்கனையாக செரீனா உருவெடுப்பார். இதற்கு முன்பு அமெரிக்காவின் ஜெப் தரங்கோ நன்னடத்தை விதி மீறல் காரணமாக தடை விதிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக யாரும் இதுபோல தடை விதிக்கப்பட்டதில்லை.
1995ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியின்போது நடுவர் மீது அதிருப்தி அடைந்த தரங்கோ, களத்தை விட்டு கோபத்துடன் வெளியேறினார். மேலும், பிரெஞ்சு நடுவர் ப்ரூனோ ஒரு ஊழல் பேர்வழி என்றும் குற்றம் சாட்டினார். இதையடுத்து அடுத்த ஆண்டு நடந்த விம்பிள்டன் உள்ளிட்ட இரண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.அதேபோன்ற தடை தற்போது செரீனாவுக்கும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.