பெண்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியமான ஸ்கேன் பரிசோதனைகள்


திருமணத்துக்கு முன்...

* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பெண்களின் சினைப்பை நல்ல நிலையில் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

* 20 முதல் 30 வயதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மார்பகங்களில் புற்றுநோயல்லாத கட்டிகள் ஏதேனும் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில்...

* முதல் ஸ்கேன் (35 முதல் 50 நாட்களில்) கர்ப்பத்தை உறுதி செய்யவும், கருவிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைத் தெரிந்து கொள்ளவும்... ஒருவேளை இதயத் துடிப்பு இல்லை என்றால் 15 நாட்கள் கழித்து மறுபடிஇன்னொரு முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். அப்போதும் இதயத் துடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கரு கலைக்கப்படும்.

* 2வது ஸ்கேன் (11 முதல் 14 வாரங்களில்) கருவின் வளர்ச்சி இயல்பாக இருப்பதை அறிந்து கொள்ளவும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் பாதிப்பிருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவும்...

குழந்தையின் கழுத்துப் பகுதி அடர்த்தியை Nuchal translucency சோதனையின் மூலம் பார்த்து டவுன் சிண்ட்ரோம் உறுதி செய்யப்படும். சில நேரங்களில் இந்த என்.டி. சோதனையில் துல்லியம் தவறிப் போகலாம். அதைத் தவிர்க்க ஆட்டோ என்.டி. என்கிற லேட்டஸ்ட் சோதனை வந்திருக்கிறது.

20 வாரங்களில் குழந்தையிடம் வேறு ஏதேனும் குறை பாடுகள் உள்ளனவா எனத் தெரிந்து கொள்ள செய்யப்படுகிற 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை தாயின் வயிற்றுக்குள் கொட்டாவி விடுவது, சொரிவது, கண்களைத் திறந்து பார்ப்பது, கால்களை உதறுவது போன்ற சேட்டைகளைக் கூடப் பார்க்க முடியும்.


கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்

குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா, தொப்புள் கொடி அமைப்பு, அது குழந்தையின் கழுத்தைச் சுற்றியுள்ளதா, குழந்தையின் தலை கீழே இருக்கிறதா, சுகப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள...

டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன் என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கர்ப்பிணி அல்லாதவர்களுக்கான சோதனைகள்...

* மார்பகங்களின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ, வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போலத் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். வெறும் பத்தே நிமிடங்களில் இந்தச்சோதனையை முடிக்கலாம்.

* மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய ‘எஃப்.என்.ஏ.சி’ என்கிற fine needle aspiration cytology (FNAC) முறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் வழிகாட்டுதல்படி துல்லியமாக செய்ய முடிகிறது.

* மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதைக் கடக்கும் பெண்கள் வருடத்துக்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்து  விடலாம்.

* கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தீவிரமும் இன்று மிகவும் அதிகமாக இருக்கிறது. பாப் ஸ்மியர் சோதனை யின் மூலம் கர்ப்பப்பை வாயிலிருந்து செல்களை எடுத்து புற்றுநோயைக் கண்டறியலாம். அதில் சந்தேகம் இருந்தால் எம்.ஆர்.ஐ. மற்றும் பெட் சி.டி. ஸ்கேன்களும் பரிந்துரைக்கப்படும்.

* 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்பு பலவீன நோய் வரும். எலும்புகளின் பலவீனத்தின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய ‘டெக்ஸ்சா ஸ்கேன்’ உதவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"