சென்னையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இரு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இரு செவிலியர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், "விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் என்ற பெயரில் இரண்டு பேர் எங்கள் வீட்டுக்கு வந்து, இங்கு விபச்சாரம் நடப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது அதை விசாரிக்க வந்துள்ளோம் என்று கூறினர்.
குடிபோதையில் இருந்த அவர்கள் இருவரும் செவிலியர்களான எங்கள் கையைப் பிடித்து இழுத்து எங்களுடைய ஆசைக்கு ஒத்துழைத்தால் இந்த வழக்கை மூடி மறைத்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் இழுத்ததில் எங்கள் உடையும் கிழிந்ததால், அத்துமீறி நடந்த அந்த இரண்டு பேரையும் வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள், இல்லையெனில் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுப்போம் என்று தெரிவித்தோம்..
இதைக்கேட்ட அவர்கள், நாங்களே போலீஸ், எங்களைப் பிடிக்க இன்னொரு போலீசா?’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
பின்னர், அவர்கள் தொலைபேசி மூலம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததோடு, மீண்டும் வீட்டுக்கு வந்து இரண்டு செவிலியர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் ." என்று அந்த புகாரில் கூறியிருந்தனர். மேலும் அவர்கள் யார் என்ற அடையாளம் தெரியும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.